இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 30 ஜூலை, 2013

தற்குறிப்பேற்றம்

தற்குறிப்பேற்றம்

மரபுக்கவிதை

இயல்பாக உள்ள பொருளின்மீதோ, இயல்பாக இயங்கும் பொருளின்மீதோ கவிஞன் தானாக ஒரு கருத்தை ஏற்றிக் கூறுதல் தற்குறிப்பேற்றம் ஆகும்.
நட்சத்திரங்களைக் குறித்துச் சிவப்பிரகாசர் பாடும் பாடல் பின்வருமாறு: 
கடல்முரசம் ஆர்ப்பக் கதிர்க்கயிற்றால் ஏறி 
அடைமதி விண்கழைநின்று ஆடக் - கொடைமருவும் 
எங்கள் சிவஞான ஏந்தல் இறைத்தமணி 
தங்கியவே தாரகைகள் தாம்
இப்பாடல், கடலாகிய முரசு முழங்க, கதிராகிய கயிற்றில் ஏறி, வானமாகிய மூங்கிலில் நின்று ஆடக்கூடிய சந்திரனாகிய கூத்தாடிக்குச் சிவஞானி (சிவப்பிரகாசரின் குருநாதர்) வாரி வழங்கிய பொற்காசுகளே நட்சத்திரங்களாகும் என்பதாகப் பொருள் தருகின்றது. 

புதுக்கவிதை

கடிகார முட்களைக் கொண்டு, சமுதாய ஏற்றத்தாழ்வைச் சுட்டுகின்றார் மு.மேத்தா. 
ஏ, கடிகாரமே 
பேச்சை நிறுத்தாத 
பெரிய மனிதனே ! 
குதிக்கும் உன்னுடைய 
கால்களில் ஒன்று ஏன் 
குட்டையாய் இருக்கிறது? 
காலங்கள்தோறும் 
இருந்துவருகிற 
ஏற்றத் தாழ்வை 
எடுத்துக் காட்டவோ?
என்னும் அக்கவிதையில் சிறிய முள், பெரிய முள் பேதம் - சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வைச் சுட்ட அமைந்ததாகக் கவிஞர் தம் கருத்தை ஏற்றியுரைக்கின்றார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக