இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 20 ஜனவரி, 2015

oru siru kathai

தாயின் கணச்சூடு 
**************************

பரபரப்பான நகர வாழ்க்கை (நரக வாழ்க்கை )  ஆதவன்  அதிகாலையில் எல்லோரையும் உட்சாகபடுத்தும் வண்ணம் எழுகிறான் அவனுக்கென தன் கடமையை தவறாமல் செய்கிறான் என்று முணுமுணுத்தபடி
என்   கடமைக்கு ஆயத்தம் ஆகினேன் நான் . என் பெயரும் ஆதவன் ......!

என்  குடும்பம் ஒரு அழகான அளவான குடும்பம். எல்லோருக்கும்   காலை நேரம் என்றால் நகர புறத்தில் வீடு ஒரு போர்களம் தான் எல்லாவற்றையும் கவனித்து விட்டு வேலைக்கு போகும் முன் மேல் மாடியில் இருக்கும் என் அம்மாவிடம் முகத்தை காட்டிவிட்டு வேலைக்கு செல்வதுதான் ஆதவனின் வழமையான செயல். அம்மா " பூரணம் " எண்பது வயதை தாண்டி  வாழ்கையின் இறுதியோடு போராடும் ஆத்மா ஜீவன். அப்பாவை இழந்து மூன்று வருடங்களாக அவரின் நினைவுகளோடு புலம்பிக்கு கொண்டு  வாழும் அன்பு ஜீவன் ஆதவனின் அம்மா பூரணம் .

ஒரு நாள்  அம்மா " மகன் ஆதவா உன்னிடம் ஒரு விடயம் கேட்பேன் " நீ கோபிக்கவும் கூடாது
இல்லை என்று மறுக்கவும் கூடாது நான் ஒன்றை கேட்கவா ஆதாவா என்று தயக்கத்தோடு என்னிடம் கேட்டார் . சொல்லுங்கம்மா என்ன விடயம் என்று நான் கேட்க . நான் கொஞ்ச நாள் என் சொந்த ஊரில்
போய் வாழனும் என்று ஆசையாய் இருக்கடா என்னை கொண்டுபோய் ஊரில் விடுவாயா ...?
அப்பாதான் சொந்த ஊரில் கண்ண மூடல்ல நானென்றாலும் அங்கே .....என்று இழுத்தபடி கேட்டார்
அம்மா .....!!!

சும்மா இருங்க அம்மா அங்கு யார் இருக்கினும் உங்களை பார்க்க..? பராமரிக்க..? இங்கே எண்டாலும் என்
மனைவி என் பிள்ளைகள் கவனிக்கினும் அங்கே யாரம்மா இருக்கினும் உங்களை பார்க்க ..? இருந்த
சொந்தங்கள் எல்லாம் யுத்தத்தால் புலம்பெயர்ந்து எங்க இருக்குதல் எண்டே தெரியல்ல . எனக்கு தொழிலை விட்டுட்டு வரவும் முடியாது .எப்படியம்மா சாத்தியமாகும் ..? நீங்க அங்கே போய் இருக்க ...?
என்று சொல்லியபடி அம்மாவின் ஆசைக்கு முற்றுபுள்ளி வைத்து விடை பெற்றேன் .

இரவு தூக்கதுக்கு போய் துங்க முடியல்ல .....அம்மாவின் ஆசையில் ஒரு ஆத்மா திருப்தி இருப்பதை உணர்ந்தேன் . அம்மாவை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முடிவெடுத்தேன் . அடுத்த நாள் அம்மாவிடம்
சென்று உங்கள் ஆசையை நிறைவேற்றுகிறேன் ஒருமாதம் பொறுங்கள் பாடசாலை லீவு விடட்டும்
சின்னம்மாவிடம் கேட்டு ஒரு சில நாட்கள் ஊரில் இருந்துவிட்டு வாருங்கள் . நானும் உங்களை அடிக்கடி
வந்து பார்கிறேன். உங்கள் சந்தோசம் தானே அம்மா என் சந்தோசம் என்றேன் . அம்மாவின் முகத்தில்
அப்படி ஒரு சந்தோசம் . அதை பார்த்ததில் எனக்கோ அளவற்ற சந்தோசம் .

அம்மாவின் சந்தோசமும் எனது சந்தோசமும் அந்த ஒரு மாதம் கூட நிலைக்க வில்லை .

ஆம் அம்மாவுக்கு திடீரென பாரிசவாதம் ஏற்பட்டது .ஒரு அடிகூட எடுத்து வைக்கமுடியாத நிலைக்கு
போய் விட்டார் . தூக்கி நிறுத்தி அவரை சுத்தம் செய்வதெலாம் நான் பெற்ற பாக்கியம் என்று கருதி
அம்மாவின் அன்போடு வாழ்ந்து வந்தேன் . அவர் பேசுவதும் புரியாது .நாம் பேசுவதும் அவருக்கு
புரியாது அந்த நிலைக்கு வந்து விட்டார் என் அம்மா .

சில நாட்களில் அவர் கேட்கும் திறனையும் பார்க்கும் திறனையும் இழந்து விட்டார் . வைத்திய சாலையில் அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்படவே . நாட்கள் பல வைத்திய சாலையில் கழிந்து
கொண்டே போயின . உற்றார் உறவினர் அயலவர் என்று பலர் வைத்திய சாலையில் அம்மாவை
பார்ப்பதற்கு வந்து சென்றனர் . யார் வந்து செல்கிறார்கள் என்ன சொல்கிறார்கள் என்று எதுவுமே
தெரியாத அந்த உச்ச கட்டத்தில் அம்மா வந்து விட்டார் . கண்கள் மூடிய நிலை தொடர்ந்தது .
யார் அருகில் சென்று தொட்டாலும் ஒரு உணர்வும் இல்லாத நிலையில் அம்மா .

வைத்தியர்கள் கைவிட்ட நிலை . ஒரு பேச்சு கூட பேசாத நிலை . அன்று நான் அம்மாவின் அருகில் சென்று அம்மாவின் கையை பிடிந்தேன் . அதுவரையும் மூடியிருந்த கண் .மெல்ல விலகியது .
அதுவரை பேசாமல் இருந்த உதடு அசைந்தது . அசையாமல் இருந்த கைகள் மெல்ல அசைந்தன .
நான் மெல்ல மேலும் அழுத்தினேன் .

யாரது ..? ஆதவனா ...? என்று கேட்டுவிட்டு என் கையை இறுக்க அழுத்தியபடி கண்ணின் ஓரத்தில்
சிறு துளி வர மீண்டும் கண்ணை மூடினார் அம்மா . அதன் பின் மீண்டும் திறக்கவே இல்லை .
எத்தனை உறவுகள் எத்தனை சொந்தங்கள் வந்தெல்லாம் என் அம்மாவை தொட்டபோது கண் திறக்காத
அம்மா .ஒரு சொல் கூட பேசாத அம்மா . நான்  அம்மாவின் கையை பற்றிய போது எப்படி நான் ஆதவன்
என்று கண்டு பிடித்தார் ...? அதுதான் தாய் . அதுதான் தொப்புள் கொடி உறவு  . ஒரு குழந்தை பிறந்தபோதும்  தாய் தூக்கும் போதும்  ஒரு கணச்சூடு ஏற்படும் .அந்த கணச்சூடுதான் தாயின் இறுதி காலம் வரை பிள்ளையோடு பிண்ணி பிணைந்திருக்கும் .அந்த கணச்சூடுதான் என்னை அம்மாவுக்கு உணரவைத்தது என்றுதான் சொல்வேன் .

அம்மாவின்   எல்லா ஆசையையும் நிறைவேற்றினாலும் அம்மாவின் இறுதி ஆசை தன் ஊரில் இறுதி
மூச்சு போகவேண்டும் என்ற ஆசை நிறைவேறாமல் போனதை இட்டு வேதனை பட்டு கொண்டிருக்கிறேன் இந்த நிமிடம் வரை ...எல்லோர் வாழ்க்கையிலும் ஒரு நிறைவேறாத ஆசை
இருந்தே ஆகும் என்பது உண்மைதான் ....!!!


எழுதியவர் ; கே இனியவன்
இடம்           ; இலங்கை  யாழ்ப்பாணம்
இந்த கதை என் சொந்த சிந்தனை என்பதை உறுதிப்படுத்துகிறேன்
நன்றி வணக்கம்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக