இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 30 ஜூலை, 2013

ஹைக்கூ , சென்ரியு , லிமரைக்கூ வடிவம்

ஹைக்கூ , சென்ரியு , லிமரைக்கூ வடிவம்

ஹைக்கூ

‘ஹை’ என்பதற்கு ஜப்பானிய அடிச் சொல்லுக்கு அணுத்தூசி, கரு, முழுமையான கரு என்ற பொருள் உண்டு. ‘கூ’ என்பது சொற்றொடர், வெளிப்பாடு, வாக்கியம், பகுதி, ஒரு வரி, ஓர் அடி, ஒரு செய்யுள், ஒரு கவிதை என்றும் பொருள் தருகிறது.

இவற்றை இணைத்துப் பார்க்கையில் ஹைக்கூ என்பது கரு போன்றும், உயிரணு போன்றும் உருவானதொரு கவிதை என்னும் முழுப்பொருளைத் தரும். மேலும் வளர்ச்சிக்கும் விரிவுக்கும், ஒரு கருவுக்கு உள்ளிருக்கும் இன்னொரு கவிதைக் கருவைக் காண்பதற்கும் ஹைக்கூ என்ற சொல் சிறப்பாக அமைந்திருப்பதைக் காணலாம்.

‘ஹைக்கூ’ ஜப்பானிய மொழிக் கவிதை. 3 அடிகள் கொண்டது. மூன்று அடிகள் கொண்ட ஜப்பானிய ஹைக்கூ ஐந்து, ஏழு, ஐந்து சீர்களைக் கொண்டு 17 சீர்களில் ஹைக்கூ படைக்கப்படும் (தமிழுக்கு இந்த சீர் எண்ணிக்கை தேவையில்லை). ஜென் தத்துவத்தோடு இயற்கை மற்றும் மெய்யியலோடு தொடர்பு கொண்டது. கவித்துவம் கொண்டது. இந்தியாவின் (தமிழ்நாடு உள்பட) சூழலுக்கு ஜப்பானிய ஹைக்கூவின் உள்ளடக்கக் கோட்பாடு பொருந்தி வராது என்ற போதிலும் எப்படியோ இந்தியாவில் (தமிழ்நாடு உள்பட) ஓர் இலக்கிய வடிவமாக / கவிதையாக இடம் பிடித்துவிட்டது. பெரும்பான்மையாக தமிழ்நாட்டு ஹைக்கூ 3 அடிகள் கொண்டு எழுதப்படுகிறது. அவ்வாறு 3 அடிகள் கொண்டு எழுதப்படுவதை தமிழ் அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு ‘ஹைக்கூ’ வடிவமாகவும் அங்கீகரித்துள்ளார்கள். 

இந்தியாவின் (தமிழ்நாடு உள்பட) சூழலுக்கு ஜப்பானிய ஹைக்கூவின் உள்ளடக்கக் கோட்பாடு பொருந்தி வராது என்ற போதிலும் தமிழ் ‘ஹைக்கூ’ இயற்கை, மெய்யியல் மற்றும் கவித்துவம், குறியீடு, படிமம், தொன்மம் ஆகியவற்றையும் அவற்றின் வகைகளையும் கருத்துச் செறிவையும் கொண்டதாக இருப்பது சிறப்பு. இன்று எழுதப்படுவதெல்லாம் ‘புதுக்கவிதை’ என்பது போல ‘ஹைக்கூ’ பற்றிய சரியான புரிதல் இல்லாமல் 3 அடிகள்கொண்டு எழுதப்படுவது எல்லாம் ‘ஹைக்கூ’ என்பதால் ஹைக்கூவின் உள்ளடக்கம் தாழ்ந்துபோய் உள்ளது. ஜப்பானிய ஹைக்கூவின் தமிழ் மொழிபெயர்ப்பை தவிர்த்து விட்டால் 1974ல் கவிக்கோ அப்துல் ரகுமான் தமிழில் முதன்முதலாக ஹைக்கூ படைத்துள்ளார். இன்று பல ஆயிரம் பேர் தமிழில் ஹைக்கூ எழுதி வருகிறார்கள். தமிழில் ‘ஹைக்கூ’விற்கென்றே சில தனி சிற்றிதழ்கள் வெளிவந்து கொண்டுள்ளன.

இன்றைய ஹைக்கூக் கவிஞர்கள் பெரும்பான்மையினர் தங்களை ஹைக்கூக் கவிஞர்கள் என்று கூறிக் கொள்ள வேண்டும் அல்லது தொடர்ந்து ¨ஹைக்கூவிற்குள் இயங்கிக் கொண்டிருப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்ற தன்முனைப்புக்காகச் சென்ரியு வகைக் கவிதைகளை நிறைய படைத்து அதனை ஹைக்கூ என்று பெயரிட்டு வெளியிட்டு வருகிறார்கள் என்பது உண்மை. இதன் காரணமாகச் சென்ரியு என்ற ஒரு வடிவம் இருப்பதை அவர்களால் வெளிக்காட்டாமல் இருட்டடிப்பும் செய்யப்படுகிறது. இந்த நிலை இன்னும் ஓராண்டுவரை நீடித்தால் கூட சென்ரியு கவிதைகள் தான் தமிழின் ஹைக்கூக் கவிதைகள் என்று வாசகர்கள் மனத்தில் பதிந்துபோய்விடும். 

ஜப்பானிய மொழியில் இன்னும் - இன்றும் ஹைக்கூ, ஹைக்கூவாகவேதான் இருக்கிறது. ஹைக்கூவை எழுத முடியாதவர்கள் சென்ரியு வகையை நாடிச் சென்றுவிடுகிறார்கள். ஹைக்கூவின் பிறிதோரு வகையான நகைச்சுவை, வேடிக்கை, சமூக கேலி கிண்டல்களை உள்ளடக்கமாகக் கொண்டதுதான் சென்ரியு. 

இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் ஹைக்கூ கவிஞர்கள் என்று குறிப்பிட்டுக் கொள்ளும் பலரும் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ளவேண்டும். ஆயிரக்கணக்கான ஹைக்கூக்கள் படைத்துள்ளதாகக் காட்டிக்கொள்ளவேண்டும் என்ற போலியான / தன்முனைப்பால்(Ego) சென்ரியு வகை கவிதைகளைப் படைத்து ஹைக்கூ என்ற தலைப்பில் கவிதைத் தொகுதியாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஹைக்கூவின் உள்ளடக்கம் வேறு. சென்ரியுவின் உள்ளடக்கம் வேறு என்று ஹைக்கூ பற்றி அவர்களுக்குத் தெரிந்திருந்தும், உண்மையான ஹைக்கூவை எழுத (நிறைய எழுத) முடியாதக் காரணத்தால் சென்ரியு வகைக் கவிதைகளை எழுதிக் குவித்துவிட்டு ஹைக்கூ என்று சொல்லிக் கொள்கிறார்கள். தவறான வழிகாட்டியாவும் திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 

தமிழ்நாட்டில் ஒருவர் எழுதிய ஹைக்கூக் கவிதைகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுதான் ‘ஹைக்கூக் கவிஞர்’ என்று அழைக்கின்றனர் அல்லது பட்டம் கொடுக்கப்படுகிறது. இது தவறு. ஒருவர் ஓரிரு ஹைக்கூவைச் சிறப்பாகப் படைத்தாலும் அவர் ஹைக்கூக் கவிஞர்தான் என்று ஏற்றுக் கொள்ளும் ஜப்பானியர்களின் மனநிலை தமிழ்நாட்டிலும் பரவலாக்கப்பட வேண்டும்.

ஹைக்கூ மரபுகள்

1. ஹைக்கூ மூன்று வரியாக இருக்க வேண்டும். (ஒரு வாக்கியத்தையே பிரித்து மூன்று அடியாக்கி ஹைக்கூ எழுதக் கூடாது. ஹைக்கூவில் ஒவ்வொரு அடியும் ஒரு வாக்கியம் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.)
2. ஹைக்கூவுக்குத் தலைப்பிட்டு எழுதக் கூடாது. ஒரு ஹைக்கூவிற்கு இரண்டுக்கு மேற்பட்ட அல்லது குறைந்த பட்சம் இரண்டு உட்கருத்தாவது (குறியீடு போல; உட்பொருள்) இருக்க வேண்டும். (ஹைக்கூவுக்குத் தலைப்பிடக்கூடாது என்பதற்கானக் காரணம் இதுதான். தலைப்பைத் தாண்டிச் சிந்திப்பதைத் தடை செய்கிறது. ஒரு ஹைக்கூவின் உட்பொருள் (குறியீடு போல்) விரிந்து செல்வதாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டு ஹைக்கூக்கள் பெரும்பான்மையும் ஒற்றைப் பரிமாணத்தில்தான் வருகின்றன. ஒரு உண்மையான ஹைக்கூ குறைந்தபட்சம் இரண்டு உட்பொருளையாவதுத் தாங்கி இருப்பது சிறப்பு.)

கவிக்கோ அப்துல் ரகுமான் கூற்று:
ஹைக்கூவில் நாம் கடைபிடிக்க வேண்டிய மூன்று முக்கிய மரபுகள் உண்டு.
1.ஹைக்கூவில் முதல் அடி ஒரு கூறு. ஈற்றடி ஒரு கூறு. ஹைக்கூவின் அழகும் ஆற்றலும் ஈற்றடியில்தான் உள்ளது. ஈற்றடி ஒரு திடீர் வெளிப்பாட்டை, உணர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி முழுக் கவிதையையும் வெளிச்சப்படுத்த வேண்டும்.
2.மற்றொரு மரபு ஹைக்கூவின் மொழி அமைப்பு. ஹைக்கூவின் மொழி ஊழல் சதையற்ற மொழி. தந்தி மொழியைப் போல், அவசியமற்ற இணைப்புச் சொற்களை விட்டு விட வேண்டும். (ஹைக்கூ எளிய சொற்கள் கொண்டும் குறைந்த வார்த்தைகளைக் கொண்டும் இருப்பது சிறப்பு. படைப்பாளர் எல்லாவற்றையும் விவரித்துக்கொண்டு இருக்கக்கூடாது. விவரிப்பது வசனம் அல்லது புதுக்கவிதையின் வேலை.)
3.உயிர் நாடியான ஈற்றடியில் ஆற்றல் மிக்க வெளிப்பாட்டிற்காகப் பெயர்ச் சொல்லையே பயன்படுத்த வேண்டும்.

மேற்கண்டவற்றை ஹைக்கூப் படைப்பாளர்கள் கடைபிடிக்க வேண்டும். ஏனென்றால் ஹைக்கூவின் அடையாளமும், அழகும், ஆற்றலும் இவற்றில்தான் இருக்கின்றன.

ஹைக்கூ வாசிப்பு முறை
ஹைக்கூவை முறையாக எப்படி வாசிக்க வேண்டும் என்ற புரிதல் ஹைக்கூ எழுதுபவர்களுக்குக் கூட தெரியாமல் இருப்பது வினோதமானது. 3 அடிகள் கொண்ட ஹைக்கூவை முதல் இரண்டு அடிகளை தொடர்ந்து படித்து நிறுத்த வேண்டும்(மூன்றாவது அடியைப் படிக்கக் கூடாது). மீண்டும் முதல் இரண்டு அடிகளை படித்து நிறுத்தி மூன்றாவது அடியைப் படிக்க வேண்டும். அப்படிப் படிக்கும் போது அந்த இறுதி அடி எதிர்பாராதத் திருப்பம் கொண்டதாக இருக்க வேண்டும். இப்போது ஹைக்கூ எழுதுபவர்கள் இந்த எளிமையான முறையை மட்டுமே கடைபிடித்தால் கூட அவர்கள் எழுதும் ஹைக்கூவை மேலும் சிறப்பாகப் படைக்க முடியும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக